நீ குடியேறிய நாள்முதலே
பூமி எனக்குப் புலப்படாமல் போனது.
ஒவ்வொரு விடியலும்,
உன்வீட்டு வாசல் ஒரு
உலகவரைபடத்தை எனக்குப் பரிசளிக்கிறது.
நான் அழுவதும் சிரிப்பதும்
அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது, இப்பொழுதெல்லாம்.
நான் கண்ணிமைக்கும் கனத்தை
ஒரு இரவு தக்கவைத்துக்கொள்ளும்
அவசரம் புரியவில்லை.
இறுகப் பூமியைப் பற்றிக்கொண்டபோதும்
ஈர்ப்புவிசையை இழக்கிறேன் நான்.
என் விழித்திரைக்கும்
உலகிற்குமான இடைவெளியில்
கூடாரம் போட்டவள் நீ.
எல்லா இரவுகளிலும்
கனவும் நானும் உன்னைக் காண்கிறோம்.
நீ ஒரு பார்வை வீசிப் புறப்படும்
ஓர் அதிகாலைக் கனவில்,
என்னையறியாமல் நான் உறங்கிவிடுகிறேன்.
No comments:
Post a Comment