Thursday, January 8, 2009

நாம்


பதற்றமில்லாமல் நாம் இன்னும்
பக்கத்தில் நிற்கப் பழகவில்லை.


கைநடுங்காமல் பேனாவோ காகிதமோ
கொடுத்ததாய் தகவலில்லை.


எதார்த்தமாய் என்றாவது
நேருக்குநேர் பார்த்திருக்கிறோமா?
இயல்பாய் ஏதாவது பேசியிருப்போமா?


“சுகமா?”என்ற சம்பிரதாயங்களில்லாத
சந்திப்புகள் உண்டா?
சுற்றும்முற்றும் பார்க்காமல்
பேசிக்கொண்டதாய் செய்தியுண்டா?


இடைவெளிவிடாமல்
இருபது வார்த்தைகள்கூட
இப்போதும் பேசமுடியாது.


காலங்குலத்திற்கு மேல்
கடைசிவரை சிரித்ததுமில்லை.


ஒருநாள் குருட்டு தைரியத்தில்
கொஞ்சம் உண்மை உலறினேனே.
அன்று என் கைக்குட்டைக்கும் வியர்த்தது
உனக்குக் கட்டாயம் தெரியும்.


அரைமனதுடன் அன்பளிப்பு வாங்கி
முக்கால்மனதுடன் முகம்மலர்ந்து
பண்டிகைநாட்களில் பரிமாறிக்கொண்டோம்.


பலருடன் பழகிய அனுபவங்களிருந்தும்
பழகத்தெரியாதவர்கள் போல் நடித்தோம்.


நம் நட்புநாடகத்தில்
எதார்த்தத்திற்கு மட்டும்
எந்தக் கதாப்பாத்திரமும் தரப்படவில்லை.


சத்தியமாகச் சொல்கிறேன் தோழி!
நாம் சமூகத்தின் விமர்சனமில்லாமல்
பழகவில்லை.


தவறான கண்ணோட்டங்களிலிருந்து
தப்பிப் பழகியிருப்போமா?இல்லை.
இருந்தும் பழகிக்கொண்டுதான்
இருக்கிறோம் நண்பர்களாய்.


பாவம் தோழி!
நம் நட்பிற்கே இக்கதியென்றால்
காதலர்கள் பாவம் தோழி.

No comments:

Post a Comment