இதயத்தின் நான்கறைகளிலும்
இடியுடன் கூடிய மழை.
உன் மூச்சுக்காற்றின் மூலக்கூறுகள்
என் நுரையீரலை வட்டமிட்டபடியே.
உன் நிழல் தீண்டித்தீண்டியே
என் ரேகை தேயும்.
என் நெற்றிச் சுருக்கங்களில்
உன் நினைவு விரியும்.
ஆத்திரத்தில் நான் அரைந்தாலும்
உன் கண்களின் கார்காலம்
என் கோபத்தின் கொள்ளியை அணைத்துவிடும்.
மரணத்தின் தூண்டில் என் கண்களுக்கு
மங்கலாகத் தெரிகின்றது.
இப்பொழுது என்னுடலில்
இதயம் மட்டுமே அசைகிறது.
அன்பே! நம் மணிவிழா முடிந்தாலென்ன?
என் மனமின்னும் மார்க்கண்டேயன்,
நம் காதல் இன்றும் சிரஞ்சீவி தான்.
இது உன் கல்லறைமீது சத்தியம் கண்மணி.
No comments:
Post a Comment